Episode 87, Docat 26 – துணைநிலை அமைப்பு – Principle of Subsidiarity

துணைநிலை அமைப்பு என்றால் என்ன? பல குடும்பங்களை உள்ளடக்கியதாக சமுதாயமானது இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகைய குடும்பங்கள் ஒவ்வொன்றும் தனித்து இயங்குகின்ற அதே வேளையில் சமூகத்தை அல்லது அரசை சார்ந்திருக்கிறது என்பதையும் அறிவோம். குடும்பமானது தனக்குள் ஒரு அமைப்பைக் கொண்டிருக்கிறது. அப்பா, அம்மா, பிள்ளைகள் என்ற ஒறு சிறிய சமூகமாக இயங்குகிறது. இக்குடும்பமானது, தங்களுடைய குடும்பம் சார்ந்த காரியங்களை தீர்மானிக்கவும், அதை நடைமுறைப்படுத்தவும் சுதந்திரமும் அதிகாரமும் பெற்றிருக்கின்றன. குடும்ப விஷயங்களில் சமூகம் அல்லது அரசு தலையிடுவதை எவரும் விரும்புவதில்லை. ஆனால், குடும்பமானது வேறு பல காரியங்களுக்காக சமூகத்தையும் அரசையும் சார்ந்திருக்க வேண்டிய சூழலும் இருக்கிறது. வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம், சமய வாழ்வு, உடமைகளுக்கான பாதுகாப்பு, போன்றவற்றிற்காக ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தை அல்லது அரசை சாரந்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது, ஆக அரசுக்கென தனி அதிகாரங்கள் உள்ளன. அவ்வாதிகாரத்தை குடும்ப வாழ்வின் பாதிக்கின்ற எல்லா காரியங்கள் மீதும் செலுத்த முடியாது. அது குடும்பத்தின் சுதந்திரத்தையும், தன்னுரிமையையும் இழக்கச் செய்யும். அதே வேளையில் குடும்ப வாழ்வுக்கு அவசியமான பொருளாதார அமைப்பு, கல்வி அமைப்பு, சுகாதார அமைப்பு போன்ற அமைப்புகளை உருவாக்கி, குடும்பத்திற்கு உதவ வேண்டியது அவசியமாக இருக்கிறது.

இதுவே துணைநிலை அமைப்பு என வரையறுக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் அதிகாரப் பகிர்வு எனவும் குறிப்பிடலாம். குடும்பத்தை மையப்படுத்தி நாம் எடுத்துக்காட்டைப் பார்த்தோம். மைய அரசு – மாநில அரசு, மாநிலம் – மாவட்டம், மாவட்டம் – உள்ளாட்சி கட்டமைப்பு என இத்துணைநிலை அமைப்புக்கு பல எடுத்துக்களை முன்வைக்கலாம். திரு அவைக்குள்ளும் இத்தகைய நிலையானது இருக்கிறது. உலகளாவிய திருஅவை – மறைமாவட்டங்கள், மறைமாவட்டங்கள் – பங்குகள் என இந்த அதிகாப் பகிர்வு நடைபெறுகிறது.  ஆக இதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன

1.   சிறிய அமைப்புகள், தங்களுக்குரிய தன்னுரிமையோடு வாழ உரிமைப் பெற்றவையாக இருக்கின்றன. எ.கா. குடும்பம்.

2.   இக்குடும்ப வாழ்வு சீராக அமைய, அதாவது குழந்தைகள் கல்வி அறிவு பெறவும், குடும்பம் தங்களுக்கு தேவையான செல்வத்தை ஈட்டவும், உடல் நலத்துடன் வாழவும் உதவிட வேண்டியது மேல் மட்ட பெரிய அமைப்புகளின் கடமையாக இருக்கிறது. எ.கா. அரசு.

திருஅவைக்குள் இத்தகைய துணைநிலை அமைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி திருத்தந்தை பனிரண்டாம் பயஸ் பின்வருமாறு கூறுகிறார்:

திருஅவையின் ஒட்டுமொத்த நலனைக் கருதி, திருஅவை அதிகாரிகள், திருஅவை கட்டமைப்பு அனுமதிக்கும் அலுவல்களை பொதுநிலையினருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அருட்பணியாளர்களை விடவும் சிறப்பாக செயல்பட தகுதி வாய்ந்த பொதுநிலையினர் திருஅவைக்குள் இருப்பார்கள். அவர்கள் பொறுப்புணர்வுடன் திருஅவையின் பொதுநலனுக்காக தங்கள் உழைப்பை அளிக்க வேண்டும்.

திருஅவைக்குள் அருட்பணியாளர்கள் அனைத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்னும் அதிகார மையப்படுத்துதலை நீக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறுகிறார்.

இன்று நம் நாட்டில் இலவசங்களை எதிர்பார்ப்பதும் அதற்காக நீண்ட வரிசைகளில் நின்று பொருள் வாங்குவதும் இயல்பாகிப் போய் விட்டது. சுய மாண்புடன், உழைப்பதற்கும், செல்வத்தை ஈட்டுவதற்கும், உடல் நலன் பேணுவதற்கும், கல்வி பெறுவதற்கும் அவசியமாக இருக்கும் அமைப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் கொள்ள வேண்டுமே ஒழிய இலவசங்களை கொடுத்தல் எவ்வகையிலும் நல்லதல்ல. அப்படிக் கொடுக்கும் போது, அது மனித மாண்பை மங்கிப் போகச் செய்யும் செயலாக அமையும்.

ஆபிரகாம் லிங்கன் பின்வருமாறு கூறுகிறார்: “மக்கள் தங்களால் இயன்ற காரியங்களைச் தாங்களே செய்ய அனுமதிக்கப்படாமல் அதில் தலையீடு செய்வது எவ்வகையிலும் அவர்களுக்குச் செய்யப்படும் உதவியாக இருக்காது.”



Post a Comment

0 Comments